தேர்தலில் வெற்றி பெற்ற எம்.பி.க்களில் 93% மில்லியனர்கள் - டாப் 3-யில் இரண்டு பாஜக, ஒரு தெலுங்கு தேசம் எம்.பி.
டாப் 3 கோடீஸ்வர வெற்றி வேட்பாளர்களில் இருவர் பாஜக எம்.பி.க்கள். தெலுங்கானா செவெல்லா தொகுதியில் வெற்றி பெற்ற கொன்டா விஸ்வேஸ்வர ரெட்டியின் சொத்து மதிப்பு ரூ.4,568 கோடி.
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் 2024 முடிவுகள் வெளியான நிலையில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்களில் 93 சதவீதத்தினர் பல ஆயிரம் கோடி சொத்துக்குச் சொந்தமானவர்கள் என்று ஜனநாயகச் சீர்த்திருத்தங்களுக்கான அமைப்பு (ADR) ஆய்வறிக்கையில் கூறியுள்ளது. இது 2019-ஆம் ஆண்டை விட 15% அதிகம் என்கிறது அதே ஆய்வறிக்கை.
இதில் டாப் 3 கோடீஸ்வர வெற்றி வேட்பாளர்களில் இருவர் பாஜக எம்.பி.க்கள். தெலுங்கானா செவெல்லா தொகுதியில் வெற்றி பெற்ற கொன்டா விஸ்வேஸ்வர ரெட்டியின் சொத்து மதிப்பு ரூ.4,568 கோடி. ஹரியாணா குருக்ஷேத்ரா தொகுதியிலிருந்து வெற்றி பெற்ற தொழிலதிபர் நவீன் ஜிண்டால் சொத்து மதிப்பு ரூ.1,241 கோடி. இவர்களையெல்லாம் விஞ்சி விட்டார் தெலுங்கு தேசம் கட்சியின் சந்திரசேகர் பெம்மசானி, இவர் ஆந்திரா குண்டூர் தொகுதியிலிருந்து வென்றுள்ளார் இவரது சொத்து மதிப்பு ரூ.5,705 கோடி.
வெற்றி பெற்ற 543 வேட்பாளர்களில் 504 பேர் கோடீஸ்வரர்கள் என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. 2019-ல், 475 (88 சதவீதம்) வெற்றி பெற்ற வேட்பாளர்கள் கோடீஸ்வரர்களாகவும், 2014-ல் 443 (82 சதவீதம்) பேர் கோடீஸ்வரர்கள் என்று ஏடிஆர் அறிக்கை கூறுகிறது.
![shutter](https://images.yourstory.com/cs/wordpress/2016/09/millennial-billionaires-forbes-2016.jpg?fm=png&auto=format)
பாஜகவின் வெற்றி பெற்ற 240 வேட்பாளர்களில் 227 பேர் (95 சதவீதம்), காங்கிரஸின் 99 பேரில் 92 பேர் (93 சதவீதம்), திமுகவின் 22 பேரில் 21 பேர் (95 சதவீதம்), டிஎம்சியின் 29 பேரில் 27 பேர் (93 சதவீதம்), சமாஜ்வாடி கட்சியின் 37 வேட்பாளர்களில் 34 பேர் (92 சதவீதம்) ரூ.1 கோடிக்கு மேல் சொத்து இருப்பதாக அறிவித்துள்ளனர்.
ஆம் ஆத்மி(3), ஐக்கிய ஜனதாதளம் (12) மற்றும் தெலுங்கு தேசம் (16) ஆகியவற்றின் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் அனைவரும் கோடீஸ்வரர்கள் என்று ADR தனது பகுப்பாய்வு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பணபலமே வெற்றியைத் தீர்மானிக்கிறது என்பதில் சந்தேகம் எதுவும் இல்லை என்று கூறும் இந்த அறிக்கை, கோடீஸ்வர வேட்பாளர்களின் வெற்றி வாய்ப்புகள் 2024 தேர்தலில் 19.6% என்கிறது. கோடிக்கும் கீழ் பணம் வைத்திருப்பவர்களின் வெற்றி வாய்ப்பு 0.7% தான்.
42 சதவீத வேட்பாளர்கள் மொத்தம் ரூ.10 கோடி மற்றும் அதற்கு மேல் சொத்து வைத்துள்ளனர். 19 சதவீத வேட்பாளர்கள் ரூ. 5 கோடி முதல் 10 கோடி வரை சொத்து வைத்துள்ளனர். 32 சதவீதம் பேர் ரூ.1 கோடி முதல் 5 கோடி வரை சொத்து வைத்துள்ளனர். வெற்றி பெற்ற வேட்பாளர்களில் 1 சதவீதம் பேர் மட்டுமே ரூ.20 லட்சத்திற்கும் குறைவான சொத்துக்களை வைத்துள்ள வேட்பாளர்கள் ஆவார்கள்.
உதாரணமாக, மேற்கு வங்க மாநிலம் புருலியாவைச் சேர்ந்த பாஜகவின் ஜோதிர்மய் சிங் மஹதோ தனது சொத்து மதிப்பு வெறும் 5 லட்சம் ரூபாய் மட்டுமே என தெரிவித்துள்ளார்.
இதேபோல், மேற்கு வங்க மாநிலம் ஆரம்பாக் பகுதியைச் சேர்ந்த டிஎம்சியின் மிதாலி பாக் ரூ.7 லட்சம் மதிப்பிலான சொத்துக்களை வைத்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம் மச்லிஷாஹரைச் சேர்ந்த எஸ்பி பிரியா சரோஜின் சொத்து மதிப்பு ரூ.11 லட்சம் மட்டுமே.
இந்த ஆய்வறிக்கை அதிக கடன்களைக் கொண்ட வேட்பாளர்களையும் பட்டியலிட்டுள்ளது. 1,038 கோடிக்கும் அதிகமான கடன்களூடன் டிடிபியின் பெம்மாசானி முதலிடத்தில் உள்ளார். தமிழகத்தின் அரக்கோணத்தைச் சேர்ந்த திமுகவின் எஸ் ஜெகத்ரட்சகன் ரூ.649 கோடியும், ஆந்திராவின் நெல்லூரைச் சேர்ந்த தெலுங்குதேசம் கட்சியின் பிரபாகர் ரெட்டி வெமிரெட்டி ரூ.197 கோடியும் கடன் வைத்துள்ளனர்.
![](https://images.yourstory.com/assets/images/alsoReadGroupIcon.png?fm=png&auto=format)