'LIC பாலிசிகளை வேறு நிறுவனங்களுக்கு விற்கக் கூடாது' - எல்.ஐ.சி.நிர்வாகம் எச்சரிக்கை!
எல்.ஐ.சி. பாலிசிகளை வேறு நிறுவனங்களுக்கு உரிமை மாற்றமோ, விற்பனையோ செய்தால் அவை நிராகரிக்கப்படும், என்று எல்.ஐ.சி. தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல்.ஐ.சி. பாலிசிகளை வேறு நிறுவனங்களுக்கு விற்கவோ, உரிமம் மாற்றவோ செய்தல் கூடாது, இவ்வாறு செய்தால் அவை நிராகரிக்கப்படும் என்று எல்.ஐ.சி. நிர்வாகம் எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக எல்.ஐ.சி. நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது,
எல்.ஐ.சி. பாலிசி வைத்திருப்பவர்கள் தங்களது பாலிசிகளை எல்.ஐ.சி. நிறுவனத்திடம் ஒப்படைப்பதற்குப் பதிலாக வேறு சில நிறுவனங்களுக்கு உரிமை மாற்றம், விற்பனை மற்றும் பரிமாற்றம் செய்வதாகவும் அவற்றை சில நிறுவனங்கள் பெறுவதற்கு ஒப்புதல் அளித்ததாகவும் புகார்கள் எழுந்துள்ளன.
![LIC](https://images.yourstory.com/cs/18/7be5482008d911e9bb473d9d98ed1e05/Imageyrne-1719389276300.jpg?fm=png&auto=format)
எல்.ஐ.சி. நிறுவனத்திற்கு வேறு எந்த நிறுவனங்களுடனும் இது போன்ற சேவைகளுடனும் தொடர்பு இல்லை. இது தொடர்பாக முன்னாள் எல்.ஐ.சி. அதிகாரிகள் கூறும் எந்த ஒரு கருத்திற்கும் எல்.ஐ.சி. பொறுப்பேற்காது.
எல்.ஐ.சி. ஆயுள் காப்பீட்டுப் பாலிசிகளை விற்பனை, பரிமாற்றம் மற்றும் உரிமை மாற்றம் செய்வது காப்பீட்டுச் சட்டம் 1938-ன் படி மேற்கொள்ள வேண்டும், தற்போது நடைமுறையில் இருக்கும் சட்டங்களின் படி, மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகள் பாலிசிதாரர்களின் நலன் சார்ந்து இல்லாமல் வர்த்தக நோக்கில் இருப்பதால் பாலிசிகளை விற்பனை பரிமாற்றம், மற்றும் உரிமை மாற்றம் செய்தால் அவை நிராகரிக்கப்படும், என்று எல்.ஐ.சி. சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.