The Goat: 'சின்ன சின்னக் கண்கள்' பாடல் - AI மூலம் பவதாரிணி குரலுக்கு உயிர் கொடுத்த யுவன் மற்றும் கிருஷ்ண சேத்தன்!
நடிகர் விஜய்யின் The Goat படத்தில் இடம்பெற்றுள்ள, ‘சின்னச் சின்னக் கண்கள்’ என்ற பாடலில் மறைந்த பவதாரிணியின் குரலுக்கு, ஏஐ தொழில்நுட்பம் மூலம் மீண்டும் உயிர் கொடுத்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் இசையமைப்பாளர் யுவன், மற்றும் ஏஐ நிறுவன இசைக்கலைஞர் கிருஷ்ணா சேத்தன்.
முன்னணி நடிகர்களின் பிறந்தநாள் என்றாலே, ரசிகர்களுக்கு அது திருவிழாதான். அதிலும், நடிகர் விஜய்யின் 50வது பிறந்தநாள் என்றால் கேட்கவா வேண்டும். நலத்திட்ட உதவிகள் உட்பட பல்வேறு வகைகளில் விஜய்யின் பிறந்தநாளைக் கொண்டாட அவரது ரசிகர்கள் மற்றும் கட்சியினர் திட்டமிட்டிருந்தனர்.
ஆனால், கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததால், தனது பிறந்தநாளைக் கொண்டாட வேண்டாம் என விஜய் கூறிவிட்டார். ஆனாலும் விஜய்யின் ரசிகர்களை ஏமாற்ற விரும்பாத 'தி கோட்' (The Goat - The Greatest Of All Time) படக்குழுவினர் அப்படத்தின் இரண்டாவது சிங்கிளை, விஜய்யின் பிறந்த தினமான ஜூலை 22ம் தேதி மாலை வெளியிட்டனர்.
இது விஜய்யின் ரசிகர்களுக்கு மட்டுமின்றி, மறைந்த பிரபல பாடகி பவதாரிணியின் ரசிகர்களுக்கும் பெரிய ட்ரீட்டாக அமைந்து விட்டது.
![bhavatharini](https://images.yourstory.com/cs/18/f4e080f008d911e9bb473d9d98ed1e05/Image931n-1719221368856.jpg?fm=png&auto=format)
மீண்டும் உயிர் பெற்ற பவதாரிணி குரல்
'சின்ன சின்னக் கண்கள்...' என்ற பாடலை நடிகர் விஜய் பாடி இருப்பதுடன், அவருடன் இணைந்து பவதாரிணியின் குரலும் மனதை மயக்கும் வகையில் இடம் பெற்றிருக்கிறது.
பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும், இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜாவின் சகோதரியுமான பவதாரிணியின் குரலுக்கு ரசிகர்கள் ஏராளம். தனது இனிமையான குரலுக்கு தேசிய விருது உட்பட பல விருதுகளை வாங்கிய பவதாரிணி, தொடர்ந்து தனது குரலால் ரசிகர்களை மகிழ்விப்பார் என அவர்கள் எதிர்பார்த்தனர்.
ஆனால், கடைசி நேரத்தில் கண்டறியப்பட்ட புற்றுநோயால் கடந்த ஜனவரி மாதம் திடீரென பவதாரிணி உயிரிழந்தது அவரது குடும்பத்தினரையும், ரசிகர்களையும் பெரும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியது. இனிமேல் அவரது குரலில் புதிய பாடலைக் கேட்கவே முடியாதா என ஏங்கிக் கிடந்த அவர்களுக்கு, தி கோட் படப் பாடலில் பவதாரிணியின் குரல் இணைந்திருப்பது பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கிறது.
இப்படத்தின் மூலம், நீண்ட வருடங்களுக்கு பிறகு விஜய் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். வரும் செப்டம்பர் 5ம் தேதி தி கோட் படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இப்படத்தின் முதல் சிங்கிளான 'விசில் போடு' பாடல் ஏப்ரல் 14ம் தேதி தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு வெளியானது. கலவையான விமர்சனங்கள் வந்த அந்தப் பாடல் யூடியூப் தளத்தில் 59 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.
![yuvan](https://images.yourstory.com/cs/18/f4e080f008d911e9bb473d9d98ed1e05/4-1719221475114.jpg?fm=png&auto=format&w=800)
ஏஐ-ல் விஜயகாந்த்
விஜய் தீவிர அரசியலில் இறங்கி கட்சி ஆரம்பித்தபிறகு தயாராகி வரும் படம் என்பதாலும், ‘இனி தொடர்ந்து அவர் திரைப்படங்களில் நடிக்க மாட்டார், இதுவே அவரது கடைசி படமாக இருக்கும்’ என ஒரு தகவல் உலா வருவதாலும் இப்படம் பற்றிய எதிர்பார்ப்பு ஏகத்துக்கும் எகிறிக் கிடக்கிறது. இது தவிர படத்தின் எதிர்பார்ப்பை மேலும் கூட்டும் வகையில் படக்குழுவினர் பல்வேறு வேலைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதில் குறிப்பாக மறந்த நடிகர் மற்றும் அரசியல்வாதி விஜயகாந்த்தை ஏஐ தொழில்நுட்பம் மூலம் இந்த படத்தில் காட்சி ஒன்றில் தோன்ற வைக்க இருப்பதாக முன்பு ஒரு தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது விஜய்யின் பிறந்தநாளை ஒட்டி, கபிலன் வைரமுத்து பாடல் வரிகளில், தி கோட் இரண்டாவது பாடலான, ‘சின்ன சின்ன கண்கள்...' பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
மீண்டும் பவதாரிணி
‘சின்ன சின்ன கண்கள்...’ என பவதாரிணியின் குரலில் மனதை வருடும் மெலடி பாடலாக இப்பாடல் உருவாகியிருக்கிறது. ஏஐ முறையில் இப்பாடலை யுவன்சங்கர் ராஜா உருவாக்கியிருக்கிறார்.
![singer bhavatharini](https://images.yourstory.com/cs/18/7be5482008d911e9bb473d9d98ed1e05/singerbhavatharini-1719229906384.jpg?fm=png&auto=format&w=800)
மறைந்த பாடகி பவதாரிணி
இது தொடர்பாக இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
“தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் இரண்டாவது சிங்கிள் எனக்கு மிகவும் ஸ்பெஷல். இந்த உணர்வை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. பெங்களூருவில் இந்தப் பாடலை நான் இசையமைத்த போது, நானும், வெங்கட்பிரபுவும் இந்தப் பாடலை என் சகோதரி பாடினால் சரியாக இருக்கும் என நினைத்தோம். அவர் மருத்துவமனையிலிருந்து குணமடைந்து வந்ததும் அவருடைய குரலில் பாடலை பதிவு செய்யலாம் என நினைத்திருந்தேன்."
"ஆனால், ஒரு மணிநேரம் கழித்து அவர் மறைந்த செய்தி கிடைத்தது. அவருடைய குரலை இப்படி பயன்படுத்துவேன் என்று நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை. எனது இசைக்குழுவினருக்கும், இதை சாத்தியப்படுத்தியதில் பங்காற்றிய அனைவருக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இது ஒரு விவரிக்க முடியாத தருணம்,” எனத் தெரிவித்துள்ளார்.
மீண்டும் பவதாரிணியின் குரல் உயிர்ப்பெற்றிருப்பதை அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.
டைம்லெஸ் வாய்சஸ்
ஏஐ மூலம் இப்படி ஏற்கனவே மறைந்த பாடகர்களின் குரலைப் பயன்படுத்துவது இது முதன்முறையல்ல. முன்னதாக, ஏஐ டெக்னாலஜி மூலம் லால் சலாம் படத்தின் ஒரு பாடலில் மறைந்த சாகுல் ஹமீது, பம்பா பாக்யா ஆகியோரின் குரல்களை பயன்படுத்தியிருந்தார் ஏஆர் ரஹ்மான். தற்போது அவரைத் தொடர்ந்து யுவன் தனது அக்காவான பவதாரிணியின் குரலை தி கோட் படத்தில் பயன்படுத்தி இருக்கிறார்.
![timeless voices](https://images.yourstory.com/cs/18/f4e080f008d911e9bb473d9d98ed1e05/6-1719221641042.jpg?fm=png&auto=format&w=800)
இப்படி மறைந்த கலைஞர்களின் குரலை பத்திரப்படுத்தி, மீண்டும் உயிர் கொடுக்கும் வேலையைச் செய்து வருகிறது கிருஷ்ண சேத்தனின் 'டைம்லெஸ் வாய்சஸ்' ஸ்டார்ட் அப் நிறுவனம்.
ஆஸ்கர் நாயகன் ஏ ஆர் ரஹ்மான் உடன் நீண்ட காலமாக பணிபுரியும் இசை தயாரிப்பாளரும், இசைக்கோர்வை பொறியாளருமான கிருஷ்ண சேத்தனின் ஸ்டார்ட்அப் நிறுவனம் தான் இந்த டைம்லெஸ் வாய்சஸ் (Timeless voices). அதிநவீன செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மறைந்த கலைஞர்களின் குரலுக்கு மீண்டும் உயிர் கொடுத்து வருகிறது இந்த நிறுவனம்.
![timeless voices](https://images.yourstory.com/cs/18/f4e080f008d911e9bb473d9d98ed1e05/8-1719221726656.jpeg?fm=png&auto=format&w=800)
Timeless voice கிருஷ்ண சேத்தன்
விசேஷமான குரல்
இது குறித்து பேசிய கிருஷ்ண சேத்தன்,
"பவதாரிணி அவர்களின் குரல் மிகவும் விசேஷமானது, தனித்தன்மை மிக்கது. அதை மீண்டும் உயிர்ப்பிக்கும் வாய்ப்பை அளித்த யுவன் ஷங்கர் ராஜா அவர்களுக்கு மனமார்ந்த நன்றி. இந்த பாடலைக் கேட்டு யுவன் ஷங்கர் ராஜா அவர்களும் இயக்குநர் வெங்கட் பிரபு அவர்களும் மிகுந்த மகிழ்ச்சி தெரிவித்தனர். இசைஞானி இளையராஜா அவர்களையும் சந்தித்து வாழ்த்து பெற்றேன்," எனத் தெரிவித்துள்ளார்.
லால் சலாம் படத்தில் இடம் பெற்ற ‘திமிரி எழுடா’ பாடலைக் கேட்ட யுவன்சங்கர் ராஜா, கோட் திரைப்படத்தில் இடம்பெறும் குடும்பப் பாடலான 'சின்ன சின்ன கண்கள்' பாடலுக்காக பவதாரிணியின் குரலை பயன்படுத்த விரும்பி கிருஷ்ண சேத்தனை அணுகியுள்ளார்.
இந்த வாய்ப்பு கிடைத்ததற்காக பெரிதும் மகிழ்ந்த கிருஷ்ண சேத்தன், பவதாரிணியின் குரல் மாதிரிகளை யுவன் ஷங்கர் ராஜா அலுவலகத்தில் இருந்து பெற்று, மூன்று தினங்கள் தனது குழுவினருடன் உழைத்து செயற்கை தொழில்நுட்பத்தின் உதவியுடன் 'சின்ன சின்ன கண்கள்' பாடலுக்கு அதை பயன்படுத்தியுள்ளார்.
முதல்முறை தொழில்முனைவோர்
பல்வேறு விருதுகளை வென்றுள்ள இசை தயாரிப்பாளரும், இசைக்கோர்வை பொறியாளருமான கிருஷ்ண சேத்தன், மூன்றாம் தலைமுறை இசைக்கலைஞர் மற்றும் முதல் தலைமுறை தொழில்முனைவோர் என்பது குறிப்பிடத்தக்கது.
'டைம்லெஸ் வாய்சஸ்' குறித்து கிருஷ்ண சேத்தன் கூறுகையில், பாடகர்கள் மற்றும் நடிகர்களின் குரலைப் பாதுகாத்து செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் தேவைக்கேற்ப அதை சரியான முறையில் பயன்படுத்துவதே டைம்லெஸ் வாய்சஸின் நோக்கமாகும். ரஹ்மான் சாரிடம் இந்த யோசனையை நாங்கள் முன்வைத்த போது அவர் அதை வரவேற்றார். இதைத் தொடர்ந்து 'திமிரி எழுடா' பாடலுக்கு பம்பா பாக்யா மற்றும் சாஹுல் ஹமீதின் குடும்பத்தினரிடம் அனுமதி வாங்கி அவர்களது குரலை பயன்படுத்தினோம். இந்த பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
"குரல்களை செயற்கை தொழில்நுட்பம் மூலம் பிரதியெடுத்து நாங்கள் பயன்படுத்துகிறோம். இதன் மூலம், பிரபல பாடகர்கள் முதல் இளம் பாடகர்கள் வரை பயனடைய முடியும். பாடகர்கள் தங்கள் குரலை என்றென்றும் பாதுகாக்க முடியும். உலகெங்கும் உள்ள இசை நிறுவனங்கள் மற்றும் இசையமைப்பாளர்களை அவர்கள் எளிதில் அணுக முடியும். பிரபல நடிகர்கள் மிகவும் சுலபமாக பல மொழிகளில் டப்பிங் பேச முடியும்," என்கிறார்.
![timeless voices](https://images.yourstory.com/cs/18/f4e080f008d911e9bb473d9d98ed1e05/7-1719221758977.jpeg?fm=png&auto=format&w=800)
இந்தியன் 2
ஏ.ஆர்.ரஹ்மானின் இசைப் பயணத்தில் 'ரங் தே பசந்தி'யில் இணைந்து இரண்டு தசாப்தங்களாக ஒரு முக்கிய அங்கமாக இருந்து வருகிறார் கிருஷ்ணசேத்தன். இசைக்கலைஞராக குறிப்பிடத்தக்க பங்களிப்பு வழங்கியுள்ளதோடு, பிட்ச் இன்னோவேஷன்ஸ் எனும் நிறுவனத்தையும் கிருஷ்ண சேத்தன் தொடங்கி நடத்தி வருகிறார். இந்த முன்னோடி இசை மென்பொருள் நிறுவனம் அதன் புதுமையான தயாரிப்புகளுக்காக பல சர்வதேச பாராட்டுகளைப் பெற்றுள்ளது.
“கலைஞர்களுக்கு முன்னுரிமை என்ற அணுகுமுறையுடன், கலைஞர்களின் உரிமைகளை பாதுகாப்பதே டைம்லெஸ் வாய்சஸின் நோக்கமாகும். கலைஞர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதன் மூலமும் அவர்களின் தேவைகளை ஆதரிப்பதன் மூலமும் நாங்கள் வளர விரும்புகிறோம்," என்கிறார் கிருஷ்ண சேத்தன்.
லால் சலாம் மற்றும் தி கோட் படங்களைத் தொடர்ந்து, தற்போது ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல் ஹாசன் நடிக்கும் 'இந்தியன் 2' திரைப்படத்திற்காக மறைந்த நடிகர்கள் விவேக் மற்றும் மனோபாலா ஆகியோரின் குரல்களை பயன்படுத்தும் பணியில் கிருஷ்ண சேத்தன் மற்றும் அவரது டைம்லெஸ் வாய்சஸ் குழுவினர் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.