வீட்டுப் பணியாட்கள் சித்தரவதை - இந்திய தொழிலதிபர் ஹிந்துஜா குடும்பத்தினருக்கு சிறைத் தண்டனை - சுவிஸ் கோர்ட் அதிரடி!
வீட்டு வேலை செய்யும் பணியாட்களை சித்ரவதை செய்ததாக ஹிந்துஜா குடும்பத்தினர் நான்கு பேருக்கு சுவிஸ் நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்தது.
வீட்டு வேலை செய்யும் பணியாட்களை சித்ரவதை செய்ததாக ஹிந்துஜா குடும்பத்தினர் நான்கு பேருக்கு சுவிஸ் நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
இரண்டு பேருக்கு நான்கரை ஆண்டுகளும், மற்ற இரண்டு பேருக்கு 4 ஆண்டுகளும் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது நீதிமன்றம்.
பிரிட்டனில் வசிக்கும் ஹிந்துஜா குடும்பத்தினர் வங்கி, எண்ணெய் வர்த்தகம் உட்பட பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். பிரகாஷ் ஹிந்துஜாவுக்கு வயது 78. அவர் மனைவி கமல் ஹிந்துஜாவுக்கு வயது 75. இவர்களுக்கு சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனிவா நகரில் சொகுசு பங்களா உள்ளது.
![Hinduja Family](https://images.yourstory.com/cs/18/7be5482008d911e9bb473d9d98ed1e05/Hindujafamily-1719037984364.png?fm=png&auto=format)
இந்நிலையில், பிரகாஷ்-கமல் ஹிந்துஜா தம்பதியினரும் இவர்களது வாரிசான மகன் அஜய், மருமகள் நம்ரதா ஆகியோர் அவர்களிடம் பணியாற்றிய இந்தியப் பணியாளர்களை கொத்தடிமையாக நடத்தியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
மேலும், வீட்டுப்பணியாளர்களைக் கடுமையாகச் சுரண்டியதாகவும், அவர்களின் பாஸ்போர்ட்டை பிடுங்கி வைத்துக் கொண்டதாகவும் பேசிய சம்பளத்தைக் கொடுக்காமல் குறைந்த சம்பளத்தைக் கொடுத்ததாகவும் கடும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
நாளொன்றுக்கு 18 மணி நேரம் பிழியப் பிழிய கடும் வேலை வாங்கியதாகவும் சுவிஸ் பணத்தில் சம்பளம் தராமல் இந்திய ரூபாயில் சம்பளம் தந்ததாகவும் குற்றச்சாட்டுகள் பெருகின.
இந்நிலையில், இது தொடர்பான வழக்கு ஜெனீவா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணைக்குப் பிறகு ஹிந்துஜா குடும்பத்தினர் மீதான குற்றச்சாட்டை கோர்ட் உறுதி செய்தது. இதனையடுத்து,
பிரகாஷ் மற்றும் கமல் ஹிந்துஜாவுக்கு நான்கரை ஆண்டுகளும் அஜய் மற்றும் நம்ரதாவுக்கு தலா 4 ஆண்டுகளும் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
![hinduja](https://images.yourstory.com/cs/18/7be5482008d911e9bb473d9d98ed1e05/Hinduja-1719038312823.png?fm=png&auto=format)
இருப்பினும், தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக ஹிந்துஜா தரப்புக் கூறியுள்ளது. அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளில் ஆள்கடத்தல் குற்றச்சாட்டுகளை நீதிமன்றம் நிராகரித்தது. அதாவது, பாஸ்போர்ட்டைப் பறிமுதல் செய்தது உண்மை, இந்திய ரூபாயில் சம்பளம் கொடுத்ததும் உண்மை, அவர்களை தங்கள் வீட்டை விட்டு வெளியே விடாமல் சிறைபோல் அடைத்து பல மணி நேரம் கசக்கிப் பிழிந்தது உண்மை என்று கூறிய நீதிமன்றம் ஆட்கடத்தல் குற்றச்சாட்டை நிராகரித்தது.
தீர்ப்பளிக்கப்படும்போது ஹிந்துஜா குடும்பத்தினர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. 2000 ஆம் ஆண்டில் பிரகாஷ் இந்துஜா சுவிட்சர்லாந்து குடியுரிமை பெற்றார். இவர் மீது வரி ஏய்ப்பு வழக்கு ஒன்றும் உள்ளது குறிப்பிடத்தக்கது.