கடன் பத்திரங்கள் வெளியீடு மூலம் ரூ.10,000 கோடி திரட்டிய ஸ்டேட் வங்கி!
உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு கடனுதவி அளிப்பதற்காக ஸ்டேட் வங்கி கடன் பத்திரங்கள் வெளியீடு மூலம் ரூ.10,000 கோடி திரட்டியுள்ளது.
தங்களது ஐந்தாவது உள்கட்டமைப்புக் கடன் பத்திரங்கள் வெளியீடு மூலம் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா ரூ.10,000 கோடி நிதி திரட்டியது. திரட்டப்பட்ட இந்த நிதி உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு நிதியளிக்கவே என்று பாரத ஸ்டேட் வங்கி கூறியுள்ளது.
இந்தப் பத்திரங்களில் முதலீடு செய்தவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.7.36% வட்டி கிடைக்கும். இதைத்தான் ‘கூப்பன் ரேட்’ என்று வர்த்தக மொழியில் குறிப்பிடுவார்கள்.
![SBI](https://images.yourstory.com/cs/18/40b57b80a91b11ed8d456bd40c7ffe66/sbi-1719460263052.jpg?fm=png&auto=format&w=800)
இது தொடர்பாக பங்குச் சந்தை ஒழுங்குமுறை ஆணையத்திடம் தாக்கல் செய்த குறிப்பில் எஸ்பிஐ கூறும்போது,
ரூ. 19,884 கோடி முதலீடுகளை ஈர்த்துள்ளது. அந்த அளவுக்கு முதலீட்டாளர்களை இந்த பத்திரங்கள் வெளியீடு ஈர்த்துள்ளது. அடிப்படை பத்திரங்கள் வெளியீட்டு அளவான ரூ.5000 கோடிக்கு எதிராக 4 மடங்கு அதிகமான வரவேற்பைப் பெற்றுள்ளது.
பெறப்பட்ட மொத்த ஏலங்களின் எண்ணிக்கை 143 ஆகும், இது ஏலங்களின் பன்முகத்தன்மையுடன் பரந்துபட்ட பங்கேற்பையும் அடையாளப்படுத்துவதாக ஸ்டேட் வங்கியின் பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையப் பதிவு கூறுகிறது.
வருங்கால வைப்பு நிதிகள், ஓய்வூதிய நிதிகள், காப்பீட்டு நிறுவனங்கள், பரஸ்பர நிதிகள் மற்றும் கார்ப்பரேட்டுகள் ஆகியவை இந்த முதலீட்டாளர்களில் அடங்கும்.
பத்திரங்களின் மூலம் திரட்டப்பட்ட நிதியானது உள்கட்டமைப்பு மற்றும் குறைந்த விலை வீட்டுத் திட்டங்களுக்கான நீண்ட கால ஆதாரங்களை வழங்கும் நிதியுதவிக்காக பயன்படுத்தப்படவுள்ளதாக ஸ்டே வங்கி தெரிவித்துள்ளது.
தற்போதைய வெளியீட்டின் மூலம், வங்கி வழங்கிய மொத்த நீண்ட காலப் பத்திரங்கள் ரூ.49,718 கோடியாக உள்ளது. எஸ்பிஐ தலைவர் தினேஷ் காரா கூறுகையில்,
"இந்த பத்திர வெளியீடு நீண்ட கால பத்திர வெளீயீடுகளை வளர்க்கவும் மற்ற வங்கிகள் நீண்ட கால கடன் பத்திரங்களை வெளியிட ஊக்குவிக்கவும் உதவும்," என்றார்.