'மாற்றுத் திறனாளிகள், திருநங்கைகள் தொடங்கும் ஸ்டார்ட் அப்'களுக்கு சிறப்பு விதைநிதி' - சட்டப்பேரவையில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் அறிவிப்பு!
தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளால் நடத்தப்படும் ஸ்டார்ட்அப்களுக்கு ஆதரவாக சிறப்பு நிதி ஆதரவுத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று தமிழ்நாடு குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அமைச்சர் தா.மோ.அன்பரசன் இன்று சட்டப்பேரவையில் அறிவித்தார்.
TN Assembly 2024 : தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளால் நடத்தப்படும் ஸ்டார்ட்அப்களுக்கு ஆதரவாக சிறப்பு நிதி ஆதரவுத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று தமிழ்நாடு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அமைச்சர் தா.மோ.அன்பரசன் இன்று சட்டப்பேரவையில் அறிவித்தார்.
இதோடு, கோயம்புத்தூர் மற்றும் திருச்சியில் புதிய பிராந்திய ஸ்டார்ட் அப் மையங்கள் நிறுவப்படும் என்றும் சிங்கப்பூர் மற்றும் அமெரிக்காவில் GCC எனப்படும் குளோபல் ஸ்டார்ட் அப் ஒருங்கிணைவு மையங்கள் அமைக்கப்படும், என்றும் அமைச்சர் அறிவித்தார்.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில், மானியக் கோரிக்கை விவாதத்தின்போது எம்.எஸ்.எம்.இ அமைச்சர் தா.மோ.அம்பரசன், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், மற்றும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் தொடர்பான புதிய அறிவிப்புகளை இன்று சட்டசபையில் அறிவித்தார். அதில்,
"புதுயுக தொழில்முனைவோர் மேம்பாட்டின் மூலம் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை அடைவதற்காக மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளால் நடத்தப்படும் ஸ்டார்ட்அப்'களை ஆதரிக்க சிறப்பு விதைநிதி ஆதரவுத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்றார். இதற்காக ஸ்டார்ட் அப் தமிழ்நாடு மாநிலம் முழுதும் எதிர்கால பயனடைவோர்களை அடையாளம் காணும்," என்றார்.
![tn](https://images.yourstory.com/cs/18/40b57b80a91b11ed8d456bd40c7ffe66/tn-1719579704796.jpg?fm=png&auto=format&w=800)
நடப்பு நிதியாண்டில் கோவை மற்றும் திருச்சி நகரங்களில் புதிய பிராந்திய ஸ்டார்ட் அப் மையங்கள் நிறுவப்படும் என்று அமைச்சர் அன்பரசன் அறிவித்தார்.
ஏற்கெனவே இத்தகைய மண்டல ஸ்டார்ட் அப் மையங்கள் மதுரை, திருநெல்வேலி, ஈரோடு, சேலம், ஓசூர், கடலூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் கடந்த 2 ஆண்டுகளில் அமைக்கப்பட்டுள்ளது. கூடுதலாக சென்னை மெட்ரோ ஸ்டார்ட் அப் மையம் அனைத்து வசதிகளுடன் ஏற்கெனவே ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதோடு, சிங்கப்பூர் மற்றும் அமெரிக்காவில் உலகளாவிய ஸ்டார்ட் ஒருங்கிணைவு மையங்கள் உருவாக்கப்படவுள்ளது. இது தமிழ்நாட்டில் உருவாகும் ஸ்டார்ட் அப்கள் தங்கள் வர்த்தகத்தை உலக அளவில் நிறுவ உதவியாக அமையும், என்றார்.
மேலும், ஸ்டார்ட் அப் தமிழ்நாடு சென்னை மெட்ரோ மையத்தில் 'தொழில்நயம்' என்னும் நவீன வடிவமைப்பு ஸ்டூடியோ நிறுவப்படும்.